வியாழன், 1 நவம்பர், 2012

‘வாசிப்பதால் மனிதன் பூரணமடைகிறான்’



வாசிப்பு பழக்கம் என்பது அருமையான ருசி. அழகான பசி. ஒருமுறை சுவைக்கப் பழகிவிட்டால் அது தொடர்ந்து வரும். எழுத்துக்களையோ, சிந்தனைகளையோ யாரும் யாருடைய மூளையிலும் திணிக்க முடியாது. அது ஒவ்வொருவரின் தனிப்பட்ட முயற்சியின் மூலம் நடைபெறும்.
15 வயது ஆகிற குழந்தை இன்று 24 மணி நேரத்தில் 15 மணி நேரத்துக்கும் அதிகமாக பாடப்புத்தகங்களுடன் செலவிடுகிறது. கல்லூரி வரை நம் குழந்தைகளின் மூளையில் திணிக்கப்படுகிற பாடப்புத்தகங்களைத் தவிர அவர்களுக்கு வேறென்ன படிக்க கற்றுத்தருகிறோம்? வாசிப்பு பழக்கம் என்பது பசியாகவும் ருசியாகவும் இருக்க வேண்டிய நிலைமை மாதிரி, நம் அடுத்த தலைமுறைக்கு அது அலர்ஜியாகிவிட்டது.
வாசிப்பதால் மனிதன் பூரணமடைகிறான்
வாழ்க்கையில் நமக்கு சுவாரஸ்யங்கள் எத்தனையோ உண்டு. ஒவ்வொன்றும் நம்மை ஒவ்வொரு விஷயத்துக்கு அழைத்து செல்லும்அந்த வகையில் புத்தகங்கள் வாசிப்பது என்பது ஒரு தனி உலகத்தில் நாம் வாழ்வது போன்றது.
சிறந்த புத்தகங்களே நல்ல நண்பர்கள்.புத்தகங்கள் நம்முடன் பேசும். நம்மை வழிநடத்தும்.
இளைய சமுதாயத்தில் பெரும்பாலோனோர் ஜெயகாந்தனையோ, சுஜாதாவையோ தெரிந்திருக்கவில்லை. ஆனால் நேற்று வந்த நடிகையின் பிறப்பு முதல் இன்றைய வாழ்க்கை வரை தெரிந்து வைத்துள்ளனர்.
என்ன காரணம் இதற்கு?
நீங்கள் படித்துக் கொண்டு இருக்கும் இந்தக் கணினியும், வீட்டின் ஒரு மூலையில் உள்ள தொலைக்காட்சியும் முக்கிய காரணம். இன்னும் தினசரிநாளிதழ், வார இதழ் போன்றவை கூட முக்கிய காரணம். சினிமா குறித்துபக்கம் பக்கமாக வெளியிடும் இவர்கள் புத்தகம் குறித்து பத்திகளில் முடித்து விடுகின்றனர். நம்மை சுற்றி எல்லாம் இப்படி அமையும் போது யார்தான் புத்தக உலகம் குறித்து வெளியே சொல்லுவது?

இதில் முதல் இடம் ஆசிரியர்களுக்கு பெரும்பாலும் குழந்தைகள் ஆசிரியர்கள் சொல்படிதான் ஆரம்பத்தில் நடக்கின்றனர், சிறு வயதிலேயே இந்தப் பழக்கத்தை ஆரம்பித்து மனதில் பதிய வைக்க வேண்டும். பள்ளிகளில் நூலகம் மூலம்சிறு சிறு கதைப் புத்தகங்கள் கொடுத்து அவர்கள் மனதில் புத்தகம் படிக்கும் ஆசையினை விதைக்க வேண்டும். பாடப் புத்தகத்தில் திருக்குறள் இருந்தால் திருக்குறள் புத்தகம் ஒன்று எடுத்து வந்து வாசிக்க வேண்டும்.
அப்போது தான் இந்தக்குறளே நன்றாக உள்ளதே மற்றவை படித்தால் என்ன என்று தோன்றும், தோன்றாவிட்டால் கூட ஆசிரியர்கள் படித்துக்காட்டி இதை செய்ய வேண்டும் என ஊக்குவிக்க வேண்டும்
இரண்டாவது பெற்றோர், வருடாவருடம் தீபாவளி,பொங்கலுக்கு துணி எடுத்துக் கொடுப்பது மட்டும் உங்கள் கடமை. உரிமை அல்ல. ஒரு புத்தகக்கடைக்கு பிள்ளைகளை அழைத்துச் சென்று அவர்கள் விரும்பும் புத்தகம் ஒன்றைக் கூட வாங்கித் தரலாம்.
புத்தகம் படிப்பதை ஊக்குவிக்க வேண்டிய மிகப்பெரிய பொறுப்பு பெற்றோருக்குதான் உள்ளது. பல துறைகளிலும் சாதித்தவர்கள் குறித்த சுயசரிதைகள், கதைகள் போன்றவற்றை ஆரம்பத்தில் படிக்கப்பழக்கி அவர்களின் வாழ்க்கையை அர்த்தம் உள்ளதாய் மாற்றலாம்.
இதற்கு முக்கியமாய் பெற்றோர்கள் புத்தக வாசிப்பாளர்களாய் இருத்தல் அவசியம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக